பாப்பார், பிப்ரவரி.15-
இரமலான் மாதம், நோன்புப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும் விலையையும் கண்காணிக்க வரும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை ‘ஓப் பந்தாவ் 2026' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு அறிவித்துள்ளது. வியாபாரிகள் விலையைத் தன்னிச்சையாக உயர்த்துவதைத் தடுக்கவும், பயனீட்டாளர் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவும் இந்தத் தீவிரக் கண்காணிப்பு நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார்.
குறிப்பாகச் சர்க்கரை, கோழி, முட்டை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் விலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக விற்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிச் செய்வார்கள். பொதுச் சந்தைகள், பேரங்காடிகள், இரமலான் சந்தைகள் மட்டுமின்றி, தற்போதைய காலமாற்றத்திற்கு ஏற்ப இணைய வழி விற்பனைகளும் இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும். கடந்த ஆண்டு இத்தகைய சோதனைகளின் மூலம் நாடு முழுவதும் 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை பொதுமக்கள் ஏதேனும் விதிமீறல்களைக் கண்டால் உடனடியாகப் புகார் அளிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.








