புக்கிட் மெர்தாஜாம், நவம்பர்.09-
பினாங்கு மாநிலத்தில் எல்ஆர்டி போக்குவரத்துத் திட்டம் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் கூறுவதை டிஏபி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. இத்திட்டம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் அத்தியாவசியமான தேவை என்று டி.ஏ.பி. பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விறுவிறுப்பாகத் தெரிவித்தார்.
பினாங்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இத்திட்டத்தைத் தடுக்க முயல்வது பொறுப்பற்ற செயல் என்றும், அவர்கள் மக்கள் நிகராளிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். பினாங்கு எல்ஆர்டி வழித்தடத்தைப் 'பினாங்கு சென்ட்ரல்' வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமே உத்தரவிட்டார். இது நாட்டின் வடக்குப் பகுதியின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவாகும் என அவர் மேலும் அறிவித்தார்.








