இன்று மே 29-ஆம் தேதி, தேசிய செய்தியாளர் தினத்தை முன்னிட்டு, துல்லியமான, நம்பகமான மற்றும் நேர்மையுடன் கூடிய தகவல்களை மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வரும் அனைத்து செய்தியாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் ஒளிபரப்பு துறையினருக்கும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அதிவேகமாக மாறி வரும் மற்றும் சவால்கள் நிறைந்த ஊடகத் துறையில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் செய்தியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை வழங்குவது மட்டுமல்லாமல், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முக்கிய உறவுப் பாலமாகவும் செய்தியாளர்கள் செயல்படுகின்றனர் என்றும் ஹவானா 2026 தேசிய செய்தியாளர்கள் தின வாழ்த்துச் செய்தியில்பாடில்லா யூசோப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நாட்டின் ஊடகத்துறையானது, தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்றும், ஒழுக்கம், தொழில்முறைத் தன்மை மற்றும் மனிதநேய மதிப்புகளை புறக்கணிக்கக் கூடாது என்றும் பாடில்லா யூசோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ‘ஊடக நேர்மை நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்” என்ற கருப்பொருளில் ஹவானா 2026 கொண்டாட்டமானது, வரும் ஜூன் 20 -ஆம் தேதி, பினாங்கில் நடைபெறவுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் ஊடகப் பணியாளர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பட்டர்வொர்த் அரீனாவில் உள்ள பிக்கா மாநாட்டு மையத்தில், ஊடகத்துறையினரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.








