திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் தீவில் உள்ள ஒரு ரிசோர்ட் தங்கும் விடுதியில் கட்டடம் ஒன்றின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு இருந்த நான்கு தொழிலாளர்கள் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் உயிருடன் புதையுண்டனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்தது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்த நான்கு கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களுடன் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு இருந்த மேலும் நான்கு தொழிலாளர்கள் காயத்துடன் உயிர்தப்பியதாக தீயணைப்பு,மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய நால்வரை மீட்கும் பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ள வேளையில் காயமுற்றவர்கள் அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரசித்திப்பெற்ற சுற்றுலா தீவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை தொடர்ந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணிக்கு தீயணைப்பு, மீட்புப்படையின் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.








