ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.02-
பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்ததில் பினாங்கு மாநகர் மன்றத்தின் இரண்டு அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர், FMT செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், Lebuh Union- இல் உள்ள பினாங்கு மாநகர் மன்றத்தின் உரிமத் துறை அலுவலகத்திற்கு முன்னால் அந்த பலூன்களை அப்புறப்படுத்த முயன்ற இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். பலூன்களில் நிரப்பப்பட்டிருந்த வாயு எது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ராயர் கூறினார்.
காயமடைந்த அதிகாரிகளில் ஒருவரான Amirul Ashraf Rosidi, சொற்ப தீக்காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு அதிகாரி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
"இந்த பலூன்கள் தைப்பூசக் கூட்டத்தில் வெடிக்கவில்லை என்பதில் நாங்கள் ஆறுதல் அடைகிறோம். இல்லையெனில், அங்குள்ள பக்தர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்று ராயர் கூறினார்.
ராயருடன் பினாங்கு மாநகர் மன்ற மேயர் டத்தோ ஏ. இராஜேந்திரன், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் மற்றும் பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமிருலைச் சந்தித்து நலம் விசாரித்தனர். அறப்பணி வாரியத்தின் சார்பில் லிங்கேஸ்வரன் 1,000 வெள்ளியும், ராம் கர்பால் சிங் தனது தனிப்பட்ட முறையிலும் அமிருலுக்கு நிதியுதவி வழங்கினர்.
இது குறித்து பினாங்கு மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சனிக்கிழமை முதல் Jalan Macalister, Jalan Utama மற்றும் Jalan Gottlieb ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும், அங்கு உரிமம் இன்றி பலூன்கள் விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வியாபாரிகளிடம் நடவடிக்கையை நிறுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு மாநகராட்சி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கண்காணிப்பில் சிலர் அந்த உத்தரவை மீறியது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று மாலை Jalan Gottlieb ப்பில் அமலாக்க அதிகாரிகள் பலூன்களையும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை Lebuh Union - னில் உள்ள பினாங்கு மாநகர் மன்ற அலுவலகத்திற்கு அப்புறப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தனர்.
அதிகாரிகள் பலூன்களை உடைத்து அப்புறப்படுத்த முயன்றபோது வெடிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அதிகாரிகள் காயமடைந்ததுடன் மாநகர் மன்ற வாகனத்தின் பின்புறம் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் போலீசாரிடம் மாநகர் மன்றம் புகார் அளித்துள்ளது.








