உலகப் பொருளாதாரத்தில் நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக ஆளில்லா வான்வழி வாகனம் அல்லது ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை மலேசியா விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உருமாற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய ட்ரோன் தொழில்முனைவு, புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான வழிகாட்டியாக உருவெடுத்துள்ளது.
உலகளாவிய யு.ஏ.வி சந்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 55 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புடையதாக மாறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுபவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களின் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு மட்டுமின்றி, உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக விவசாயம் போன்ற பொதுத்துறை நடவடிக்கைகளுக்கும் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும், இதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்கான நிதியுதவியை அதிகரிக்கவும் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வர் தெரிவித்துள்ளார்.








