கோலாலம்பூர் விமான நிலையம் முனையம் 2-இல் பாதுகாப்பு அதிகாரியை தள்ளியதாக வைரலான வீடியோவில் காணப்பட்ட வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
33 வயதான அந்நபர், சிப்பாங் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 5 -ஆம் தேதி நடந்த இச்சம்பவம், ஹாட் யாய் செல்லும் இணைப்பு விமானத்தை தவறவிட்டதால் அந்நபர் ஆவேசமாக நடந்துகொண்டதாக KLIA போலீஸ் தலைவர் எம். ரவி தெரிவித்துள்ளார்.
அவர் கவுண்டரில் உள்ள கண்ணாடியை அடித்ததும், விமான தகவல் பலகையை உடைத்ததும், பான பாட்டிலை எறிந்ததும் மட்டுமல்லாமல், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், குற்றவாளி மீது தன்னிச்சையாக காயம் ஏற்படுத்தியதற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 323 மற்றும் அவமதிப்பான நடத்தைக்கான சிறு குற்றங்களுக்கான சட்டம் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முதல் குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரையில் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 100 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.








