கோலாலம்பூர், பிப்ரவரி.09-
சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்களை முறைப்படுத்த வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று உறுதி அளித்துள்ளார்.
பழமையான வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், மாறாக அவற்றை முறையாகப் பதிவு செய்யவே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், புதிய வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் போது முறையான திட்டமிடல் அனுமதியைப் பெறுவது அவசியம் என்று வலியுறுத்திய அமைச்சர், இதற்காக 'முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள்' RIBI பிரிவு மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகக் குழுவினர் எந்த நேரத்திலும் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறலாம் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 50 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கி வருவதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். நாட்டின் ஒற்றுமையைப் பேணும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களை மிகுந்த விவேகத்துடனும் அமைதியுடனும் கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








