கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் உயிரிழந்த 14 வயது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது மூத்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் தாயாரின் 51 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சூஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் படிவத்தில் பயின்ற மாணவி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார்.
மாணவியின் மரணம் தொடர்பாக இதுவரை 92 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் திருப்புமுனையாக தாயாரின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளின் மரணத்தில் பள்ளியில் பகடிவதை கூறுகள் இருப்பதாகக் கூறி, மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின்போது, உயிரிழந்த மாணவியின் 15 வயது மூத்த சகோதரிக்கு தாயாரின் காதலன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது. .
இதையடுத்து, சந்தேக நபர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறார்களுக்கு எதிரான 2017 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு எதிராக வவிசாரணை நடைபெற்று வருகிறது என்று டத்தோ ஃபடில் மர்சூஸ் தெரிவித்தார்








