பெட்டாலிங் ஜெயா,அக்டோபர்
கோலாலம்பூர் மாநகரின் முக்கிய வர்த்தகத் தலமான ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஆங்காங்கு திறந்து கிடப்பதாக கூறப்படும் ஆள்விழுங்கும் சாக்கடை சிமெண்ட் மூடிகள் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத்தொடர்ந்து அந்த வர்த்தகத் தலம் குறித்து பொதுமக்கள் மற்றும் வருகையாளர்கள் மத்தியில் மீண்டும் அச்சம் மற்றும் பீதி தலைத்தூக்கியுள்ளது..
கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நடைப் பாதையில் திடீரென்று ஏற்பட்ட ஆள்விழுங்கும் பாதாள சாக்டை குழிக்குள் ஓர் இந்தியப்பிரஜையான விஜயலெட்சுமி விழுந்து காணாமல் போன சம்பவம் தொடர்பான பயமும், பதற்றமும் மக்களிடையே இன்னும் தணியவில்லை.
தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் ஷாப்பிங் செய்வதற்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிற்கு செல்வது பாதுகாப்பானதா? என்று மக்கள் மத்தியில் அச்சமும், பயமும் தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்நிலையில் TIK TOK- கில் பகிரப்பட்டு வரும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் பாதாள சாக்கடை சிமெண்ட் மூடிகள் ஆங்காங்கு திறந்து கிடக்கும் காட்சியைக்கொண்ட காணொளி, மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது. பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
25 விநாடிகள் ஓட வல்ல அந்த காணொளி, லட்சுமி கார்த்திக் என்பவரால் கடந்த வியாழக்கிழமை பகிரப்பட்டுள்ளது.
மழை லேசாக பெய்து கொண்டிருக்கும் நிலையில் அங்குள்ள அங்காடி கடைகளில் மக்கள் நடமாடிக்கொண்டு இருக்கும் பட்சத்தில், அவர்களின் அருகிலேயே திறந்து மூடும் சாக்டை சிமெண்ட் மூடிகள், அங்காங்கு திறந்த கிடக்கும் காட்சியை அந்த காணொளி சித்திரிக்கிறது.
அந்த ஆள்விழுங்கும் பாதாள சாக்கடை குழிகள் பயமுறுத்தும் அளவிற்கு காணப்படுகின்றன.
எனினும் சீரமைப்புப்பணிகளுக்காக Indah Water Konsortium, அந்த பாதாள சாக்கடை சிமெண்ட் மூடிகளை திறந்ததாகவும், அவை மூடப்பட்டு விட்டதாகவும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா குறித்து மக்களை பீதியில் ஆழ்த்தக்கூடிய காணொளிகளை விருப்பம் போல் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று பொது மக்களை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆள்விழுங்கும் பாதாள சாக்கடையில் இந்தியப் பிரஜை விழுந்து காணாமல் போன சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, வருகையாளர்களை பயமுறுத்தும் நோக்கில் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.








