கோலாலம்பூர், பிப்ரவரி.22-
2026 சீனப் புத்தாண்டு கால சிறப்புச் சோதனையின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் செந்தூல் பசார் டோல் சாவடியில் நேற்றிரவு நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சோதனையில் மொத்தம் 456 அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் சாலைப் போக்குவரத்துத் துறையும் போக்குவரத்துப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து 912 வாகனங்களைப் பரிசோதனை செய்ததில், 152 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக கோலாலம்பூர் ஜேபிஜேவின் இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.
குறிப்பாக ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வாகனச் சான்றிதழ் காலாவதி, காப்பீடு இல்லாமை போன்ற விதிமீறல்கள் அதிகளவில் கண்டறியப்பட்டதுடன், முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய வெளிநாட்டினர் 11 பேரும் இந்தச் சோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்யவும், விபத்துகளைக் குறைக்கவும் இத்தகைய தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹமிடி அடாம் தெரிவித்துள்ளார்.








