கோலாலம்பூர், பிப்ரவரி.10-
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், இன்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உடனான சந்திப்புக்கு அனுமதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் டத்தோ ஶ்ரீ ரமணன் அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு மாமன்னரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இஸ்தானா நெகாராவில் நடந்த இந்தச் சந்திப்பைப் பற்றி மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மனிதவள அமைச்சான KESUMA- வின் வருங்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாமன்னருக்கு விரிவாக விளக்கிக் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமைச்சின் திட்டமிடல் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மாமன்னரிடம் விளக்கமளிக்கப்பட்டது," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டத்தோ ஶ்ரீ ரமணன், இதற்கு முன்பு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.








