மின்கம்பி திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த புத்ராஜெயா வழித்தட எம்ஆர்டி ரயில் சேவைகள், இன்று காலை முதல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த மார்ச் 3-ஆம் தேதி டாமன்சாரா டாமாய் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற மின்கம்பி திருட்டு காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரேபிட் ரயில் நிறுவனம் மேற்கொண்ட துரித சீரமைப்புப் பணிகளால் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு, தற்போது ரயில் சேவைகள் சீராக இயங்கி வருகின்றன.
பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட மாற்று ரயில் சேவைகள் மற்றும் இலவச பேருந்து வசதிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வரும் ரேபிட் ரயில் நிறுவனம், தனது பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பையும் பலப்படுத்தியுள்ளது.








