மலேசியாவின் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அர்ப்பணித்து வரும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது இனிய 2026 ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"ஆசிரியர்கள் வெறும் வகுப்பறைகளில் பாடங்களை மட்டும் போதிப்பவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் மாணவர்களின் நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் செதுக்கும் உன்னதச் சிற்பிகளாகவும், நல்வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்கிறார்கள். சிறந்த ஆசிரியரே நாட்டின் இதயம் என்ற இந்த ஆண்டின் கருப்பொருள் அவர்களின் உன்னதப் பங்களிப்பைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது" என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், நவீன கல்விச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், எவ்வித சுயநலமுமின்றி முழுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் ஆசிரியர்களின் தியாகத்தை ஒட்டுமொத்த மலேசிய மக்களும் என்றும் நெஞ்சில் ஏற்றிப் போற்றுவார்கள் என்று டத்தோஸ்ரீ ரமணன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








