கெடா, ஆகஸ்ட் 08-
கெடா மாநிலத்திலுள்ள பெட்ரோல் நிலையங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் ரோன் 95 ரக எரிவாயுவை உள்ளூரிலும், அண்டை நாட்டிலும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒரே நாளில் பல முறை விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை, உடனடியாக அமலுக்கு வருவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவுக்கான தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.
நேற்று சுங்கைப்பட்டாணி நகராண்மைக்கழக மண்டபத்தில் கெடா மாநிலத்திலுள்ள 375 பெட்ரோல் நிலையங்களின் நிர்வாகிகளுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் ரோன் 95 எரிவாயு தொடர்பாக புதிய நிபந்தனைக்குரிய நினைவுறுத்தல் கடிதத்தை வழங்கும் நிகழ்வில் டத்தோ அஸ்மான் ஆடம் இதனை குறிப்பிட்டார்.
ஒரே வாகனத்திற்கு டீசல் மற்றும் பெட்ரோல் ரோன் 95 எரிவாயுவை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது தொடர்பாக 1974 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டம் 12A பிரிவின் கீழ் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுவது தொடர்பில் கெடா மாநிலத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிலையங்களும் அணுக்கமாக கண்காணிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.
Caption
செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்








