பதினேழு வயது SPM மாணவனை காரில் மோதி தள்ளி, மரணம் விளைவித்ததாக கெடா மாநில போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த முதிர் நிலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலையில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
உதவி சூப்ரிடெண்டண்ட் முஹமாட் நஸ்ரி அப்துல் ரசாக் என்ற உயர் போலீஸ் அதிகாரி, மாஜிஸ்திரேட் S. புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கைவிலங்கிடப்பட்டு, தலை துணியால் மறைக்கப்பட்ட நிலையில் காலை 9.00 மணிக்க நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட 44 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரி, கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி மதியம் 12.40 மணியளவில் ஈப்போ, ஜாலான் தாமான் ஜாத்தி 1, ஜாத்தி இடைநிலைப்பள்ளி அருகில் 17 வயது முஹமாட் சஹாரிஃப் எஃபென்டி சம்ரி என்ற மாணவனை காரில் மோதி தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த போலீஸ் அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை ஈப்போ, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால், அந்த போலீஸ் அதிகாரியிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.








