ஜோகூர் மாநிலத்தில் நடந்த டீசல் கடத்தல் முயற்சியை, அம்மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின் கிளையைச் சேர்ந்த அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பாசீர் கூடாங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கூடுதல் கலன்கள் பொருத்தப்பட்ட லோரியின் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
இச்சோதனையின் போது, வாகனத்தின் முதன்மை கலனிலிருந்து டீசலை, மாற்றியமைக்கப்பட்ட கூடுதல் கலன்களுக்கு மாற்றுவதற்காக, இரண்டு பம்புகள் பொருத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட கலன்களில் 800 லிட்டர் வரை டீசலைச் சேமிக்க முடியும் என்று மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அந்த வாகனத்தின் ஓட்டுநர், 1961-ஆம் ஆண்டு, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








