ஜோகூர், மே.18-
44 ஆடம்பர வாகனங்கள் ஜோகூர் மாநில சாலை போக்குவரத்துத்துறை (JPJ) மூலம் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 1 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் பல முக்கியப் பகுதிகளில் நடத்தப்பட்ட 'ஒப்ஸ் லக்சுரி' (Ops Luxury) சிறப்புச் சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் ஆடம்பர வாகனங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மற்றும் ரகசியக் கண்காணிப்பின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநில ஜேபிஜே இயக்குனர் ஸுல்கர்நாயின் யாசின் தெரிவித்துள்ளார்.
சாலை வரி காலாவதியானது, காப்புறுதி இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் வாகனத்தின் தொழில்நுட்ப விதிகளை மீறியது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , வாகனத்தின் தரம் அல்லது மதிப்பைத் தாண்டி, சட்ட அமலாக்கம் அனைவருக்கும் சமமாகவும் கண்டிப்பாகவும் நிலைநாட்டப்படும் என்றும், சாலைப் பாதுகாப்பை உறுதிச் செய்ய இத்தகைய சோதனைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








