செர்டாங், பிப்ரவரி.26-
"மலேசியத் சீனச் சங்கங்களின் கூட்டமைப்பான Hua zong ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீனச் சமூகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மலேசியர்களின் மனசாட்சியை மதித்து நடக்க வேண்டும் என்றும், குழப்பத்தை விளைவிக்கும் சிறுபான்மையினரின் தூண்டுதல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி மலாய் மொழியின் அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டு, அது ஓரங்கட்டப்படாத வரை, மலேசியர்கள் சீன மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டார்.
இன்றையச் சூழலில் சீன மொழி ஓர் உலகளாவிய பொருளாதார மொழியாக உருவெடுத்துள்ளதால், அதன் புலமையை வளர்த்துக் கொள்வது நாட்டின் எதிர்காலத்திற்குப் பலம் சேர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள Wisma Huazong -கில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஹுவாசோங் தலைவர் டத்தோ லிம் கா சுவான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








