கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 9.50 மணியளவில், தாமான் ஜோகூர் ஜெயா பகுதியில், வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிடிான் மேற்கொண்ட திடீர் சோதனையில், கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு வனவிலங்குகளின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மலேசியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வனவிலங்கு உடல் பாகங்கள் பறிமுதல் நடவடிக்கையாக, சுமார் 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 602 மலைப்பாம்பின் பித்தப்பைகள், 420 கரடியின் பித்தப்பைகள், புலி மற்றும் குரங்கு வகைகளைச் சேர்ந்ததாக நம்பப்படும் உடல்பகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 191 பாம்பின் உடல் பகுதிகள் கைப்பற்றப்பட்டதோடு, சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சோதனையில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒருவர், மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கடத்தல் நடவடிக்கைக்கும், சர்வதேச அளவில் செயல்படும் பெரிய கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், மற்ற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து பெர்ஹிலிடிான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.








