கடந்த 2014-ஆம் ஆண்டு, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான சில உள்துறை ஆவணங்களை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை என்.ஓ.எஸ், ஆர்.டி.எல் நியூஸ் மற்றும் டி வோல்க்ஸ்கிரான்ட் போன்ற நெதர்லாந்து ஊடக நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்தன.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சரவை கூட்ட குறிப்புகள் மற்றும் அரசின் உள்துறை அறிக்கைகளை அணுக அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில், ஸ்ட்ராஸ்பேர்க் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நெதர்லாந்து அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிடாமல் இருப்பதில், அதிகாரிகள் “தேவையான கொள்கைகள் மற்றும் அளவுகோல்களை முறையாக பின்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜூலை 17-ஆம் தேதி, ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17, கிழக்கு உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் 80 குழந்தைகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் உட்பட, விமானத்தில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








