ஜோகூர் பாரு, டிசம்பர்.29-
ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் (Mount Austin) பகுதியில் கடந்த சனிக்கிழமை ஓர் உணவகத்திற்கு வெளியே நிகழ்ந்த வன்முறைச் சம்பவம், தனிப்பட்ட பணத் தகராறு காரணமாக ஏற்பட்டது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு நபரின் வங்கிக் கணக்கை மற்றொருவர் பயன்படுத்த அனுமதித்ததும், அதில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு லட்சம் ரிங்கிட் பணத்தை அந்த நண்பர் ரகசியமாகத் திரும்பப் பெற்றதும் இந்தச் சண்டைக்கு மூலக் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியைத் தீர்க்க உணவகத்தில் நடந்த சந்திப்பு வன்முறையாக மாறியது அப்துல் ரஹமான் விளக்கினார்.
இந்த மோதல் தொடர்பாக 20 முதல் 47 வயதுக்குட்பட்ட 12 உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு வியட்நாம் பெண் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சண்டையின் போது இரும்பு நாற்காலிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவருக்குத் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்று அப்துல் ரஹமான் குறிப்பிட்டார்.








