டீசல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள இலக்குக்கு உரிய மக்களுக்கு மாதம் தோறும் தலா 200 வெள்ளி உதவித் தொகையை வழங்குவதற்கு BUDI MADANI திட்டத்தின் கீழ் இதுவரையில் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த BUDI MADANI உதவித் தொகை, தங்கள் வாகனங்களுக்கு டீசல் எண்ணெயை பயன்படுத்தும் தனிநபர்கள், விவசாயிகள், குடியானவர்கள் உட்பட இலக்குக்கு உரிய மக்களுக்கு வழங்கப்படும் என்று இரண்டாவ து நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
தீபகற்ப மலேசியாவில் டீசல் வாகனங்களை பயன்படுத்தும் சுமார் மூன்று லட்சம் பேர் மாதம் தோறும் தலா 200 வெள்ளி உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் விலை உயர்வினால் இலக்குக்கு உரிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த மாதந்திர உதவித் தொகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த ஜுன் 10 ஆம் தேதி முதல் தங்களுக்கான 200 வெள்ளி உதவித் தொகையை பெற்றுள்ளனர் என்று டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மேலும் விவரித்தார்.








