பேராக் மாநிலத்தில் ஆலயங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க மாநில அரசு உறுதியாக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
பழைய காலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்களே தற்போதைய சட்டச் சிக்கல்களுக்குக் காரணம் என்றார். ஆலயங்களை உடனடியாக அகற்றுவதைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் அனுமதி அல்லது மாற்று இடங்களை அரசு வழங்கி வருவதாக அவர் விளக்கினார்.
இதற்குச் சான்றாக, பாகான் டத்தோ, ஜெண்டராட்டாவில் அ மையவுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை டத்தோ சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
ஜெண்டராட்டா பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் செலவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலய கட்டுமானத்திற்கு பேராக் மாநில அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது என்பதை டத்தோ சிவநேசன் விளக்கினார்.
நேற்று பேரா மாநில அரசு செயலக கட்டட அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் ஓம்ஸ்.தியாகராஜனுடன் இயக்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ அ.சிவநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலய கட்டுமானத்திற்கு அனுமதி வாங்கித் தந்த ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசனுக்கு ஆலயப் பொறுப்பாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.








