கோலாலம்பூர், அக்டோபர் 01-
தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF. சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் போதுமான சேமிப்புத்தொகையை கொண்டிருக்காததற்கு , மலேசியாவின் குறைந்த சம்பள அமைப்பு முறையே காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கற்ற சந்தா முறை குறிப்பாக முறைசாரா பொருளாதாரம் அல்லது GIG ( கிக் ) பொருளாதாரத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் EPF சேமிப்பு என்பது எட்டாக் கனியாக, நிலைமையை மோசமாக்கியுள்ளது என்று EPF புதிய தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஜூகி அலி தெரிவித்துள்ளார்.
பெருகி வரும் முறைசாரா வேலைகளை நோக்கி, தற்போது பயணிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக EPF போன்ற அதிகாரத்துவ அந்திமக்கால சேமிப்புத் திட்டங்களில் தங்களை உட்படுத்திக்கொள்ளும் போக்கு தனிநபர்கள் மத்தியில் குறைந்து வருகிறது என்று டான் ஸ்ரீ சுகி குறிப்பிட்டுள்ளார்.
சேமிப்பின் அவசியம் மற்றும் அந்திமக்கால சேமிப்பின் முக்கியத்துவம் போன்ற விழிப்புணர்வும், புரிந்துணர்வும் பொது மக்கள் மத்தியில் குறைந்த வருகின்ற காரணத்தினால், EPF போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சேமிப்புத்திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
தவிர, தங்களுக்கான சம்பள அமைப்பு முறை மிக குறைந்த அளவிலேயே இருக்கின்ற காரணத்தினால் அந்திம கால சேமிப்புக்கு பிடித்தம் செய்யப்படும் சந்தாப்பணமும், சம்பள அளவின் தன்மைக்கு ஏற்ப குறைவாகவே செலுத்தப்பட்டு வருவதாக டான் ஸ்ரீ சுகி தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை 2024 ஆம் ஆண்டிற்கான நிதியின் முக்கியத்துவம் மீதான மாதாந்திர நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.








