ஷா ஆலாம் செக்ஷன் 32 பகுதியில் நாய் குட்டி ஒன்றை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடுமைப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபது வயதுடையதாக நம்பப்படும் அந்த சந்தேக நபர், நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் கட்டுமானத் தளம் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ராம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் அதிகாலை 2.14 மணியளவில், சமூக ஊடகமான டிக்டாக்கில் சம்பவத்தின் வீடியோ பரவியதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராம்சே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது, 2015-ஆம் ஆண்டின் விலங்கு நலச் சட்டம், பிரிவு 29 மற்றும் தண்டனைச் சட்டம் பிரிவு 428-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








