கோலாலம்பூர், நவ.12-
குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்க குத்தகைகளைப் பெற்றுத்தருவதற்கு லட்சக்கணக்கான வெள்ளி பணத்தை லஞ்சமாக கேட்டதாக தகவலை அம்பலப்படுத்திய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய லஞ்ச பேரத்திற்கு ஆதாரமாக 8 காணொளிகளை தாம் கொண்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட புகார்தாரர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்து இருப்பது, பெரும் கவன ஈர்ப்பாக மாறியுள்ள வேளையில், அவருக்கு திடீரென்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது..
அடையாளம் தெரியாத எண்ணைப் பயன்படுத்தி, வாட்ஸ்ஆப் மூலமாக இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நபர் நேற்றிரவு போலீசில் புகார் செய்துள்ளார்.
தாம் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளி என்றும், வாயை மூடிக்கொண்டு இருக்காவிட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் தாம் கொலை செய்யப்படக்கூடும் என்றும் சீன மொழியில் சுமார் 16 விநாடிகளில் சம்பந்தப்பட்ட ஆசாமி தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த நபர் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். தம்முடைய பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதத்தை அளிக்குமானால், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட 8 காணொளிகளையும் அந்த ஆணையத்திடம் தாம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக அந்த புகார்தாரர், பாதுகாப்பு கோரியுள்ளார்.








