ஜார்ஜ்டவுன், நவ.19-
இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்கட்டடத்தின் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம், நேற்று மாலையில் பினாங்கு, ஜெலுத்தோங் பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் பினாங்கு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து மாலை 5.57 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த இரண்டாம் படிவ மாணவி ஸ்தலத்திலேயே மாண்டார். இதில் குற்ற அம்சம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பள்ளியில் முதலாவது மாணவராக வர முடியாமல் போனதால் கடந்த சில தினங்களாக தாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனமுடைந்த நிலையில் இருப்பதாக கடித குறிப்பு ஒன்றை அந்த 14 வயது மாணவி விட்டுச்சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாணவியின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி அப்துல் ரசாக் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக எந்தவொரு ஆருடத்தையும் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.








