கடந்த பிப்ரவரி மாதம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 45 வயதுடைய நபருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 7 நாள் சிறைத்தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
கே. ஹரிதாஸ் நாயர் என்ற அந்த நபர் அனுமதிக்கப்பட்ட 50 மில்லி கிராம் அளவை விட அதிகமாக, அதாவது 108 மில்லி கிராம் ஆல்கஹால் அவரது இரத்தத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மலாக்கா, ஜாலான் பரமேஸ்வரா சாலையில் ஹரிதாஸ் நாயர், இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹரிதாஸ் நாயருக்கு சிறை மற்றும் அபராதத்துடன், அவரது ஓட்டுநர் உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யவும் மாஜிஸ்திரேட் சாரதா ஷீனா முகமது சுலைமான் உத்தரவிட்டார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில்கொண்டு, மற்றவர்களுக்குப் பாடமாக அமைய இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் சாரதா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
ஹரிதாஸ் நாயர் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என மாஜிஸ்திரேட் எச்சரித்தார்.








