கடந்த ஆண்டு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணைக் கட்டாய உழைப்புக்காகக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட டாக்டர் தம்பதியினர், கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
27 வயதான அமீர் மிர்சா கமாருதீன் மற்றும் 28 வயதான டாக்டர் சித்தி ஹஜார் அகமது காலித் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி சப்ரி இஸ்மாயில் முன்னிலையில் வாசிக்கப்பட்டன.
42 வயதான இந்தோனேசியப் பெண்ணை மனிதக் கடத்தல் மூலம் உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளராகப் பணியாற்றும் அமீர் மற்றும் மருத்துவ அதிகாரியான சித்தி ஹஜார் ஆகிய இருவரும், கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி அம்பாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு 2007-ஆம் ஆண்டின் கடத்தல் எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 12-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.








