ஜொகூர்,ஆகஸ்ட் 08-
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி, நேற்று 7 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு ஜோகூர் பாரு மற்றும் தங்காக் ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய நான்கு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 34 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜோகூர் மாநிலத்தில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை ஜோகூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
ஜோகூர் பாரு செளதன் மாவட்ட போலீசாருடன் இணைந்து ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு, இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.
இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 33 மற்றும் 36 வயதுடைய இரண்டு நபர்கள் பிடிபட்டுள்ளதாக இன்று ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குமார் விளக்கினார்.
இந்த கடத்தல் கும்பல், கடந்த ஜுன் மாதம் முதல் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குமார் தெரிவித்தார்.
இந்த கும்பலிடமிருந்து போதைப்பொருள் கலந்த பானம், Ekstasi கலவை, Eramin போதை மாத்திரைகள் உட்பட பல வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் விவரித்தார்.








