கோலாலம்பூர், பிப்ரவரி.26-
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் அது போராக வெடிக்கக்கூடும் என்பதால், மலேசியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Tehran-இல் உள்ள மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்த மலேசிய அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அங்கு மலேசியர்கள் அதிகம் இல்லை என்றாலும் கூட, மொத்தம் 13 மலேசியர்கள் உள்ளதாகவும் முஹமட் ஹசான் நாடாளுமன்றத்தில் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்களில் இரண்டு முதல் மூன்று பேர் மாணவர்கள் என்றும், கடந்த ஆண்டு அமெரிக்கா, அணுசக்தி நிலையங்களைத் தாக்கிய போது கூட, அவர்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அவர்கள் நாடு திரும்ப மறுத்து விட்டதையும் முஹமட் ஹசான் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவர்களுக்கு அங்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அரசாங்கத்தைக் குறை கூற முடியாதபடி, இழப்பீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் முஹமட் ஹசான் விவரித்துள்ளார்.
தற்போதைய காலக் கட்டத்தில் எந்த நேரத்திலும் அங்கு எதுவும் நடக்கலாம் என்பதால் மலேசியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.








