சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்க்சோ நிர்வகிக்கும் 'மை பியூச்சர் ஜாப்ஸ்' இணையத்தளம் வழியாக, கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 321 வேலை காலியிடங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இன்னும் 96 ஆயிரத்து 700 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டத்தோஸ்ரீ ரமணன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தற்போது காலியாக உள்ள வேலைகளில் கிட்டத்தட்ட 40 சதவீத இடங்கள் உயர் தொழில்நுட்பத் திறன்கொண்ட பதவிகள் என்றும், 30 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வியான டிவெட் சார்ந்த துறைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவற்றில் கிட்டத்தட்ட 20 சதவீத வேலைகளுக்கு மாதச் சம்பளமாக 5 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமாக வழங்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட மை பியூச்சர் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 14,029 பேர் வேலை பெற்றுள்ளனர். இக்காலக்கட்டத்தில் 86,594 வேலை தேடுபவர்களை உள்ளடக்கி 2,989 திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. வேலை தேடுபவர்கள் விரைவாக வேலை வாய்ப்புகளைப் பெற ஏதுவாக, தகுந்த வேலைகளைத் தேர்ந்தெடுத்தல், தொழில்முறை ஆலோசனை, நேர்காணல் பயிற்சி மற்றும் மறுதிறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற விரிவான உதவிகளைப் பெர்கேசோ வழங்கி வருவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மேலும் விவரித்தார்.








