நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய 'துங்கு பாங்லிமா பெசார்' ஆக துங்கு ஜைன் அல்-ஆபிதின் நியமிக்கப்பட்டிருப்பது மாநில அரசியலமைப்பிற்கு முரணானது என்று வழக்கறிஞர் முகமட் கைருல் ஆசாம் அப்துல் அஜிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
உண்டாங் ஜெலுபுவின் வழக்கறிஞர்களில் ஒருவரான இவர், மாநில அரசியலமைப்பின் பிரிவு 26(a)-இன் படி, யாம் துவான் பெசார் எந்தவொரு பட்டத்தையோ அல்லது விருதையோ வழங்குவதற்கு முன், மாநிலத்தை ஆளும் பிற தலைவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய கட்டாயக் கலந்தாலோசனை எதுவும் இந்த நியமனத்திற்கு முன்னதாக நடத்தப்படவில்லை என்று தனது முகநூல் பக்கத்தில் அவர் சாடியுள்ளார். மாற்றுத் தலைவர்களுடன் சுமுகமான உடன்பாடு எட்டப்படாத சூழலில், குறைந்தபட்சம் உண்டாங் ஜெலுபு, உண்டாங் ஜோஹோல் மற்றும் துங்கு பெசார் தம்பின் ஆகியோருடனாவது சுல்தான் ஆலோசித்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாதது விதிமீறல் என்றும் அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








