கிள்ளான், பிப்ரவரி.06-
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS, போர்ட் கிள்ளானில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற 201.3 டன் மின்னணு மற்றும் அபாயகரமான கழிவுகளைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-ன் கீழ் தடை செய்யப்பட்ட இந்தக் கழிவுகள், ஆய்வுக்குப் பின் திருப்பி அனுப்பப்பட உள்ளன.
பிடிக்கப்பட்ட ஒன்பது கொள்கலன்களில் ஐந்து கொள்கலன்களில் சிபியு (CPU), பிரிண்டர்கள் மற்றும் நகல் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 98 டன் எடையுள்ள மின்-கழிவுகள் இருந்தன. எஞ்சிய நான்கு கொள்கலன்களில் நசுக்கப்பட்ட வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகத் துண்டுகள் என 103 டன்களுக்கும் அதிகமான கலப்பு மின்-கழிவுகள் மற்றும் பட்டியலிடப்பட்ட கழிவுகள் கண்டறியப்பட்டன.
இந்தச் சட்டவிரோதக் கழிவுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-ன் கீழ் தடை செய்யப்பட்டவை என்பதால், அவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக AKPS கமாண்டர் Datuk Nik Ezanee Mohd Faisal தெரிவித்தார்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்றுவதைத் தடுக்கவும் எல்லையோரக் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் உறுதியளித்தார்.








