கோலாலம்பூர், செப்டம்பர்.28-
சிங்கப்பூரில் மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய எல்லைக் கட்டுப்பாடுகளில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் எல்லையை எப்படி எந்தவிதச் சோதனையும் இன்றிக் கடக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பினாங்கு மாநிலத்தின் பத்து காவான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு. "காவற்படை, குடிநுழைவு, சுங்க அதிகாரிகள் கடத்தல்காரர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அல்லது விவகாரத்தைத் தெரிந்து கொண்டே அவர்களைச் சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதித்தார்களா?" என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்களை எல்லையிலேயே கைது செய்து, பின்னணியில் உள்ள கும்பலை அடையாளம் காண, மலேசிய அதிகாரிகள் தங்கள் கண்காணிப்பையும் வளங்களையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், ஏழை எளியவர்களைக் கடத்தல்காரர்களாகப் பயன்படுத்தப்படும் மோசடியை முறியடிக்கவும் அவசியம் என அவர் மேலும் கூறினார்.








