கோலாலம்பூர், செப்டம்பர்.29-
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் புடி 95 எனும் ரோன் 95 பெட்ரோல் சலுகைத் திட்டம் தொடங்குகிறது. மலேசியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இந்த திட்டத்தின்படி, லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசாக இருக்கும் ரோன் 95 பெட்ரோல், ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படவிருக்கிறது.
ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு மலேசியர்கள், முதல் முறையாகத் தங்களின் மைகார்ட் அட்டையை பயன்படுத்தவிருகின்றனர். மாதம் ஒன்றுக்கு 300 லிட்டர் வரை மலேசியர்கள் பெட்றோலைப் பெறலாம். இதன் மூலம் லிட்டருக்கு 6 காசு வீதம், மாதம் ஒன்றுக்கு 18 ரிங்கிட்டை ஒவ்வொரு மலேசியரும் மீதப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வழி நாட்டில் 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறவிருக்கின்றனர். இதற்காக 34.5 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.
சலுகை விலையில் ரோன் 95 பெட்றோலைப் பெற, மலேசியர்கள் வழக்கம் போல் பணம் செலுத்துவதற்கு முன்பு பம்ப் இயந்திரத்தில் மைகாட்டைச் செருக வேண்டும் அல்லது முகப்பிடங்களில் பணம் செலுத்தும்போது மைகாட்டைக் காட்ட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த புதிய திட்டத்தினால் விரயங்கள், ஊழல் போன்ற பழைய முறையின் கீழ் நிலவி பிரச்னைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








