குவாந்தான், பிப்ரவரி.18-
குவாந்தான் செராதிங் பகுதியில் நேற்று நடந்த துயரமான கொலை - தற்கொலைச் சம்பவம் குறித்து மேன்மை தங்கிய பகாங் சுல்தான் Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், உடன் இருப்பவர்களில் யாருக்காவது குணநலன்களில் மாற்றம் தெரிந்தால், மக்கள் அதனை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காக ஓதப்படும் Al-Fatihah நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.
செராதிங், லோரோங் செராதிங் டாமாய் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், வீடு ஒன்றில் சடலமாகக் கண்டறியப்பட்டனர்.
அக்குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான ஆடவர், தனது 28 வயதான மனைவி, 55 வயதான தாயார், 3 மற்றும் 4 வயதுடைய இரு குழந்தைகள் ஆகியோரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் பணியாற்றி வந்த அந்த ஆடவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் குவாந்தானில் பணியாற்றத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.








