புனித குர்ஆனை அவமதித்ததாகவும், சமூக ஊடகங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தை வெளியிட்டதாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ஹர்மி தம்ரி முகமது முன்னிலையில் வாசிக்கப்பட்ட, தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்த, 21 வயதான எஸ். விக்னேஸ்வரன் என்ற அம்மாணவர் விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், தாமான் ஸ்ரீ மக்கோத்தா பகுதியில், குர்ஆனை அவமதிக்கும் குற்றத்தை அவர் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கக்கூடிய வகையில், தண்டனைச் சட்டம் பிரிவு 295-ன் கீழ் இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது குற்றச்சாட்டானது, மற்றவர்களை புண்படுத்தும் நோக்கிலான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233(1)(a) இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளது.
அதே சட்டப் பிரிவு 233(2) இன் கீழ் தண்டனைகள் விதிக்கப்படும் வகையில், அச்சட்டமானது வழிவகை செய்கின்றது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதமோ, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இந்நிலையில், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 10 ஆயிரம் ரிங்கிட் பிணை விதித்துள்ள நீதிமன்றம், அம்மாணவர் மாதந்தோறும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கானது, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.








