கோலாலம்பூர், பிப்ரவரி.07-
மலேசிய கூட்டுப் படைகளின் தளபதியாக தெங்கு ஃபௌஸி இப்ராஹிம் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை Wisma Pertahanan-னில் நடைபெற்ற பதவியேற்கும் சடங்கில், முன்னாள் இராணுவத் துணைத் தளபதியான தெங்கு ஃபௌஸி இப்ராஹிம், முன்னதாக அப்பதவியிலிருந்த ஸஹானி ஸைனால் அபிடினிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
ஸஹானி ஸைனால் அபிடின் தற்போது மலேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முப்படைகளின் தளபதி மாலிக் ரஸாக் சுலைமான் இந்த பதவியேற்கும் சடங்கில் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
மேலும், சேவைப் பிரிவுத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற்ற 632-வது ஆயுதப் படைகள் மன்றக் கூட்டத்தின் பரிந்துரைக்கு இணங்க இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டது.
அப்பரிந்துரைக்கு, கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








