பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.20-
தாஃபிஸ் சமயப் பள்ளி மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சபாவில் தாஃபிஸ் பள்ளி மாணவர்களை, ஆசிரியர் ஒருவர் காலால் எட்டி உதைத்து, தலைக்கவசத்தால் தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
அது குறித்து கருத்துத் தெரிவித்த ஸாஹிட், மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, அவர்களைத் துன்புறுத்துவது போன்ற எந்த ஒரு சம்பவத்தையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, மாணவர்களுக்கு நெறிமுறைகளையும், அன்பையும், நல்ல குணங்களையும் போதிப்பதற்காக உருவாக்கப்பட்ட இது போன்ற சமயப் பள்ளிகளில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது, முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர் பள்ளி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.








