முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கை சிறையில் இருந்து அவரது வீட்டுக்கு மாற்றும் நடவடிக்கையின் போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோலாலம்பூர், லங்காக் டூத்தா பகுதியில் உள்ள அவரது இல்லம் அருகே நாளை முதல் நடமாடும் போலீஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் பக்ரி சலாம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது நஜிப்புக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவதற்காக அல்ல என்றும், அவர் வீட்டுக்கு அழைத்து வரப்படும் போது ஊடகங்கள், அண்டை வீட்டினர் மற்றும் ஆதரவாளர்களின் நடமாட்டத்தை நிர்வகிப்பதுடன், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் லங்காக் டூத்தா இல்லமானது நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான அதிகாரப்பூர்வ இடமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், அது குறித்து போலீசாருக்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என்றும் அனுவார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று சிறைத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் அந்த இல்லத்துக்குச் சென்று ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ததாகவும், நஜிப்பின் வீட்டுக் காவல் தொடங்கும் நாளிலில் இருந்து அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு சிறைத்துறையினரிடம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








