புத்ராஜெயா, மார்ச்.15-
அரசாங்கம் அறிவித்துள்ள நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை நாளில், அரசு மருத்துவமனைகளிலும் நிபுணத்துவ மருத்துவமனைகளிலும் சந்திப்புகளைக் கொண்டுள்ள நோயாளிகளுக்குப் புதிய தேதிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளைத் தொடர்பு கொண்டு புதிய தேதிகளை அறிவிக்கும் என்றும், இதன் மூலம் யாருடைய சிகிச்சையும் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார். அதே வேளையில், மற்ற பொது விடுமுறை நாட்களைப் போலவே, அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.








