கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டுப்பணியாளர்களை விநியோகித்து வந்த கும்பலை குடிநுழைவுத்துறை அதிரடியாக முறியடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி, ஷா ஆலம், காஜாங், ஸ்ரீ கெம்பாங்கான் உள்ளிட்ட 11 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில், கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 8 இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, 'இபு மஸ்னா' மற்றும் 'இபு நான்சி' என அழைக்கப்படும் சட்டவிரோத ஏஜெண்டுகள் உட்பட இரு உள்ளூர் பெண்கள், இரு ஏமன் நாட்டு ஆண்கள் மற்றும் இரு இந்தோனேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 18 இந்தோனேசியர்களும் பிடிபட்டனர் என்று மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கும்பல் கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வந்ததும், ஒரு பணியாளருக்கு 4,500 முதல் 6,000 ரிங்கிட் வரை முதலாளிகளிடமிருந்து வசூலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சோதனையில் 21 கடப்பிதழ்கள் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல் தடுப்புச் சட்டம். குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ சகாரியா விளக்கினார்.












