மலாக்கா, பிப்ரவரி.09-
கடந்த சனிக்கிழமை, மலாக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், இளம் பெண் ஒருவரைக் கத்தியுடன் துரத்தியதாகக் கூறப்படும் 50 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவமானது, இரவு 9.30 மணியளவில், பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டஃபர் பாதிட் தெரிவித்துள்ளார்.
தனது தங்கையுடன் நின்று கொண்டிருந்த 21 வயதுப் பெண்ணைச் சந்தேக நபர் கத்தியுடன் அணுகியுள்ளார்.
அந்த நபரைக் கண்டு அச்சமடைந்த அப்பெண், உடனடியாக பேரங்காடிக்குள் ஓடியதாகவும், ஆனால் அந்நபர் அவரைப் பின்தொடர்ந்து உள்ளே துரத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த சந்தேக நபருக்கும் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் அவர் தன்னையும் தனது சகோதரியையும் மிரட்டியதாகவும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட அந்நபர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
அவரை புதன்கிழமை வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக கிரிஸ்டஃபர் பாதிட் குறிப்பிட்டுள்ளார்.








