கோலாலம்பூர், பிப்ரவரி.24-
கோலாலம்பூர், செராஸ் பகுதியில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை செராஸ், பிங்கிரான் பிபிஆர் அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் ஒரு கும்பலால் கத்தி மற்றும் பேஸ்பால் மட்டையால் தான் தாக்கப்பட்டதாக அந்த நபர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த மோதல் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்ததில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் கடந்த பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 23 ஆகிய தேதிகளில் அதே பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான புகார்தாரர் கையில் காயமடைந்துள்ளாரென்றும், அவர் இன்னும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரொஸ்டி டாவுட் மேலும் கூறினார்.
"கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் மூவர் மீது ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது. சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் எவரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது. சந்தேக நபர்களில் ஒருவர், புகார்தாரரின் மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது," என்று அவர் கூறினார்.








