கெடாவில் மீண்டும் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைk கெடா மக்கள் கடுமையாகச் சாடுவார்கள் என மந்திரி பெசார் சனூசி முகமட் நூர் எச்சரித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு மாநிலத்தில் சூதாட்ட மற்றும் லாட்டரி நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் ரத்து செய்ததை சனூசி சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, சூதாட்ட உரிமங்களை அனுமதிப்பதா இல்லையா என்ற முடிவு, நிதி அமைச்சருமான பிரதமர் அன்வாரின் கைகளில் இருப்பதாக சனூசி கூறினார்.
நேற்றிரவு அலோர் ஸ்டாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சனூசி, கெடாவில் சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், மக்கள் அன்வாரை கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், கெடாவில் சூதாட்டத் தடைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குக்கு நிதியுதவி வழங்கியதாகக் கூறப்படும் “Tauke ” ஒருவரின் அடையாளம் தனக்குத் தெரியும் என்றும், நீதிமன்ற வழக்கு முடிவடைந்த பிறகு அவரது பெயரை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும் சனூசி சவால் விடுத்துள்ளார்.








