சிரம்பான், பிப்ரவரி.03-
சிரம்பான், பாம் மால் வணிக வளாகத்தில் செயல்படும் நாசி கண்டார் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு மீதமுள்ள உணவுகளைக் கழுவி, மீண்டும் சமைத்துப் பரிமாறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த உணவகம் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது. பாம் மால் முன்புற வாகன நிறுத்துமிடத்தில் நேரில் பார்த்த சாட்சி ஒருவர், உணவகத்தின் பின்புறம் இந்தச் செயல் நடைபெறுவதைக் கவனித்ததாகக் கூறியுள்ளார்.
ஊழியர் ஒருவர் கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் Tofu போன்ற மீதமுள்ள உணவுகளைக் கழுவி, பின்னர் அவற்றைத் தட்டுகளில் தனித்தனியாகப் பிரித்து வைப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சில ஊழியர்கள் நேர்மையற்ற முறையில் பதிலளித்தாலும், பின்னர் ஓர் ஊழியர் மீதமுள்ள உணவுகள் மீண்டும் சமைக்கப்படும் என்பதை ஒப்புக் கொண்டதோடு, அது "ஆபத்தானது அல்ல" என்றும் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நெகிரி செம்பிலான் சுகாதார இயக்குநர் டாக்டர் சுரைடா முகமட் கூறுகையில், இச்சம்பவம் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, என்றும் உடனடியாக அதிகாரிகளை அந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ள புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.








