பேரா மாநிலத்தில் சுற்றுலா படகுச் சேவைக்கான உரிமத்தைப் பெற கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படும் என அம்மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் சன்ட்ரியா எங் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களுடனும் கடல் துறையினருடனும் இணைந்து ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தெலுக் பாத்தேக் கடற்கரையில் நடந்தது போல் மீண்டும் விபத்துகள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இருந்த விதிமுறைகளில் சில பலவீனங்கள் இருந்ததாகக் குறிப்பிடும் சன்ட்ரியா எங் , முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் அவை சரி செய்யப்படும் என்றார்.








