கோலாலம்பூர், நவ.12-
பேரா, கிரீக் – ஜெலி மேற்கு நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை லோரியினால் மோதப்பட்டு புலி ஒன்று மடிந்த சம்பவம் உட்பட கடந்த ஆண்டிலும், இவ்வாண்டிலும் இதுவரையில் 6 புலிகள் உயிரிழந்துள்ளன என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்துள்ளார்.
மலாயாப் புலிகள் இயற்கை சூழலை விட்டு வெளியே வரும் அளவிற்கு காடுகளில் அவ்வகை புலிகளுக்கு இடர்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
காடுகளில் காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற விலங்குகள் சட்டவிரோத வேட்டையால் மிகக்குறைந்து வருகின்ற காரணத்தினால் புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளன.
இதில் கவலைக்கொள்ளும் அம்சம் என்னவென்றால் லோரியால் மோதப்பட்டு சாலையில் இறந்த கிடந்த புலியின் 4 கோரைப்பற்கள், தோல், நகங்கள், வால் போன்றவை வெட்டி எடுக்கப்பட்டு, களவாடப்பட்டுள்ளதாக நிக் நஸ்மி குறிப்பிட்டார்.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளில் மலாயாப் புலி முக்கியமானதாகும். புலியின் கோரைப்பற்கள் உட்பட இதர உடல் பாகங்களை களவாடிச் சென்றுள்ள தரப்பினர் கண்டு பிடிக்கப்பட்டால் 2010 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.








